சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜாவுக்கு அவசரகதியில் சம்மன் அனுப்பப்பட்டு கைதுசெய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அனில் துதேஜாவிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அனில் துதேஜா ஆஜராக இயலாத நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் அமலாக்கத்துறை 2-வது சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அனில் துதேஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, மஸி தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது. அடிப்படை உரிமையை உறுதிசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு-21 உள்ளது என்பதை அமலாக்கத்துறை நினைவில் கொள்ள வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியை விடிய விடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலியான குடும்ப வன்முறை வழக்குகளை போல் பி.எம்.எல்.ஏ. வழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சம்மன் வழங்கிய அமலாக்கத்துறை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்ததுடன். சத்தீஸ்கர் மாநில பொதுவிநியோக திட்ட முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை செயல்பாடுகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: