×

4 நாட்கள் தொடர் விடுமுறை: கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பலரும் கடற்கரையில் குவிந்ததால் களைகட்டியது. இதனால் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. உலக புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு எண்ணிலடங்கா சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் உள்ளன. சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் ஒரே இடத்தில் காண முடியும் என்றால் அது குமரி கடற்பகுதிதான்.  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

இங்குள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பலரும் விடுமுறையை கொண்டாடுவதற்காக கன்னியாகுமரியில் குவிந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு படையெடுத்தனர். சூரிய உதயத்தை பார்த்து ரசித்த பிறகு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் இன்று கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது. கடைகளில் வியாபாரமும் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post 4 நாட்கள் தொடர் விடுமுறை: கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kanyakumari beach ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...