×

இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒருவர் ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசினால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. விடுதலை சிகப்பி என்னும் புனைப்பெயரில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் ராமாயணத்தையும், ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இது, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவல் துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தினரை புண்படுத்திப் பேசினாலும் அதனை அதிமுக எதிர்க்கும். இதுபோன்ற செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

The post இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Hindu ,CHENNAI ,AIADMK ,O. Panneerselvam ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...