×

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகள் தீவிரம்

*ரூபே கார்டுகளை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்ட துவக்க விழாவுக்காக பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூபே கார்டு சரிபார்ப்பு பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 ஆண்டு காலத்துக்குள்ளாகவே தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தகுதியுடைய குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 771 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் தகுதியுடையோருக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் வரப்பெற்று விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற்றன. அதன்படி முதல் கட்டமாக, மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய வருவாய் வட்டங்களில் நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் ஆகிய வருவாய் வட்டங்களில் நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 23 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் 9 தாலுகா பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 841 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பத்தினர்களில் இந்த பயனாளிகளை தவிர அந்த குடும்பங்களில் தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே 2 கட்டங்களில் விண்ணப்ப படிவம் வழங்காதவர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் 3 நாட்கள் நடைபெற்றன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 749 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த குடும்ப அட்டையில் 81.33 சதவீதம் ஆகும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களின் ஆதார் விவரங்கள் அடிப்படையில் 4 சக்கர வாகனம் இருப்பது, ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், ஏற்கனவே ஓய்வூதியதாரர்கள் என பல்வேறு வகைகளில் இந்த உரிமைதொகை பெறுவதற்கு தகுதியில்லா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான 20 சதவீத விண்ணப்பங்களை மாவட்டம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக பிரத்யேகமான முறையில் ரூபே கார்டு தயார் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மகளிர் உரிமை தொகையை பயனாளிகள் நேரடியாக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் வரும் 15ம் தேதி நடைபெறும் திட்டத்தின் துவக்க விழாவில், பயனாளிகளுக்கு ரூபே கார்டு வழங்குவதற்காக முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் ரூபே கார்டுகள் அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ள ரூபே கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு, அவற்றை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் நேற்று ஈடுபட்டனர்.

The post குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...