×

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து செங்குன்றம் பகுதிகளில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது; 15 கிலோ பறிமுதல்

புழல்: செங்குன்றம் பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. செங்குன்றம், மீஞ்சூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார் நேற்று மாலை செங்குன்றம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதைபொருட்களுடன் 2 பேர் சந்தேக நிலையில் சுற்றி திரிவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, சந்தேக நிலையில் பையுடன் சுற்றி திரிந்த 2 வடமாநில வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிஷ் பிகால் (26), பிரசன்னகுமார் தக்வா (26) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, திருப்பூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து செங்குன்றம் பகுதிகளில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது; 15 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Senkunram ,Senggunram ,Dinakaran ,
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது