×

முதல் மனைவியை விவகாரத்து செய்யாததால் ஆத்திரம் காதலன் வீடுபுகுந்து மகனை கொடூரமாக கொன்ற பெண்: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: திருமணம் ஆன நபருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண், அவரது மகனை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். டெல்லியின் இந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் திவ்யன்ஷ் (வயது 11) என்ற மகன் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஜிதேந்தர் தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பூஜா குமாரி (வயது 24) என்ற இளம்பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். 2019ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பூஜா குமாரியை ஜிதேந்தர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை.

மேலும் தன் முதல் மனைவிக்கு விவாகரத்தும் கொடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பூஜா குமாரியுடன் ஜிதேந்தர் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யும்படி ஜிதேந்தரிடம் பூஜா குமாரி வலியுறுத்தி வந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜா குமாரியை விட்டு பிரிந்த ஜிதேந்தர் தன் முதல் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்தார். ஆனால், ஜிதேந்தரை மீண்டும் அடைய நினைத்த பூஜா குமாரி, முதல்மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுப்பதற்கு அவரின் 11 வயது மகன் திவ்யன்ஷ் தான் காரணம் என நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்தரின் மகன் திவ்யனை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக, ஜிதேந்தருக்கும் தனக்கும் பழக்கம் உள்ள நண்பர் மூலம் ஜிதேந்தர் தன் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டின் முகவரியை பூஜா குமாரி அறிந்துகொண்டார். பின்னர், கடந்த 10ம் தேதி ஜிதேந்தரின் வீட்டிற்கு சென்ற பூஜா குமாரி வீட்டில் தனியாக இருந்த ஜிதேந்தரின் மகன் திவ்யன் ஷை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் திவ்யன்ஷின் உடலை மெத்தையின் அடியில் துணிகள் வைக்கும் அறையில் அடைத்துவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வீட்டிற்கு திரும்பி வந்த ஜிதேந்தர் தனது மகன் திவ்யன்ஷ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீஸ் விசாரணையில் முகத்தை மூடிக்கொண்டு ஒரு பெண் ஜிதேந்தரின் வீட்டிற்குள் செல்வதும் பின்னர் வெளியேறுவதும் சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து பூஜா குமாரியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூஜா குமாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post முதல் மனைவியை விவகாரத்து செய்யாததால் ஆத்திரம் காதலன் வீடுபுகுந்து மகனை கொடூரமாக கொன்ற பெண்: டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,NEW DELHI ,
× RELATED லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு