×

மகளுக்கு பலகாரம் கொடுத்து விட்டு திரும்பிய தந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி

*மன்னார்குடி அருகே சோகம்

மன்னார்குடி : மன்னார்குடி அருகே மகளுக்கு தீபாவளி பலகாரம் கொடுத்து விட்டு திரும்பிய தந்தை உள்பட 3 பேர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பனையக்கோட்டையை சேர்ந்தவர் ரவி (50). இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (35), ஐயப்பன் (23). விவசாய கூலி தொழிலாளர்கள்.

ரவியின் மகளை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த கட்டக்குடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் தனது மகளுக்கு தீபாவளி பலகாரங்களை கொடுக்க நேற்றுமுன்தினம் காலை ரவி தனது பைக்கில் சென்றார். அவருடன் சக்திவேல், ஐயப்பன் ஆகியோரும் சென்றனர். பலகாரங்களை கொடுத்து விட்டு 3 பேரும் ஊர் திரும்பினர். பைக்கை ஐயப்பன் ஓட்டினார்.

மன்னார்குடி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வடுவூர் புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ரவி உட்பட 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் வடுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார், 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நாளில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மகளுக்கு பலகாரம் கொடுத்து விட்டு திரும்பிய தந்தை உள்பட 3 பேர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Mannargudi Mannargudi ,Diwali ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது