×

கேரளாவில் பரபரப்பு; நன்றாக படிக்க பூஜை நடத்துவதாக கூறி மாணவி பலாத்காரம்: போலி மந்திரவாதி அதிரடி கைது


திருவனந்தபுரம்: கேரளாவில் நன்றாக படிப்பதற்காக பூஜை நடத்துவதாக கூறி 15 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் (35). இவர் அப்பகுதியில் மந்திரவாதம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். தன்னிடம் வந்து பூஜை செய்தால் மாணவர்கள் படிப்பு, நடனம் உள்பட கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்று அப்பகுதியினரிடம் கூறிவந்துள்ளார். அதை நம்பி ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் இவர் மந்திரவாதம் செய்வதாக கூறி பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதியினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக போலீசுக்கும் புகார்கள் வந்தன. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை நன்றாக படிக்க வைக்க மந்திரவாதம் செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோரும் அந்த மாணவியை மந்திரவாதி ஜெயேஷிடம் அனுப்பி வைத்தனர்.தினமும் பள்ளி முடிந்ததும் மாலையில் பூஜை செய்வதற்காக தன்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த மாணவி பள்ளி முடிந்ததும் மாலையில் அங்கு சென்றுள்ளார். நாளடைவில் அந்த மாணவியை மந்திரவாதி ஜெயேஷ் பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தன்னுடைய பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை கூத்துபரம்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மந்திரவாதி ஜெயேஷை கைது செய்தனர்.

The post கேரளாவில் பரபரப்பு; நன்றாக படிக்க பூஜை நடத்துவதாக கூறி மாணவி பலாத்காரம்: போலி மந்திரவாதி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது