×

திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: துரைமுருகன் கடும் கண்டனம்

சென்னை: திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார்.

நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த தவறான குற்றச்சாட்டு. காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய். நம்பியாறு அணை-பொய்கையாறு அணை- கொடுமுடியாறு அணை-கடானா அணை-ராமநதி அணை-பாலாறு-பொருந்தலாறு அணை-மருதாநதி அணை-பரப்பலாறு அணை-வடக்கு பச்சையாறு அணை-பிளவுக்கல் அணை- மோர்தானா அணை- அடவிநயினார் அணை-ராஜாதோப்பு அணை-ஆண்டியப்பனூர் ஓடை அணை-சாஸ்தா கோயில் அணை-குப்பநத்தம் அணை-இருக்கன்குடி அணை-செண்பகத்தோப்பு அணை-நங்காஞ்சியார் அணை- நல்லதங்காள் ஓடை அணை-மிருகண்டாநதி அணை.

வரதாமநதி அணை-வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒருமுறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நீண்டகால அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும்.

The post திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: துரைமுருகன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,DMK ,Jamakalam ,Duraimurugan ,Chennai ,Dinakaran ,
× RELATED விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய...