×

இடியும் நிலையில் இருக்கும் வேளாண் துறை அலுவலகத்தை மராமத்து செய்ய கோரிக்கை

திருவாடானை,ஏப்.19: இடியும் நிலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை மராமத்து செய்து தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானையில் வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விட்டது. இதனால் பல இடங்களில் கம்பி மட்டுமே தெரிகிறது. நுழைவாயில் பகுதியிலேயே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது.இதனால் இங்கு வரும் விவசாயிகள் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் தான் அலுவலர்களை சந்திக்க செல்கின்றனர். கீழ்தளத்தில் வேளாண்மைத்துறை அலுவலகமும் மேல்மாடியில் தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது. இரண்டு துறைகளுக்கும் விவசாயிகள் அதிகளவில் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்படி ஆபத்தான கட்டிடத்தில் ஊழியர்களும் அச்சத்துடன் தான் பணி செய்கின்றனர். எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பே பெயர்ந்துள்ள சிமெண்ட் கரைகளை அகற்றி விட்டு கட்டிடத்தை புதிதாக மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடியும் நிலையில் இருக்கும் வேளாண் துறை அலுவலகத்தை மராமத்து செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Dinakaran ,
× RELATED சாலையை மறைக்கும் முள் செடிகளை அகற்ற வலியுறுத்தல்