×

மணிப்பூர் வன்முறையை கண்டித்து கிறிஸ்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து கிறிஸ்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கிறிஸ்துவ பழங்குடி இனமக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை கைது செய்யக்கூறியும் கும்மிடிப்பூண்டி பஜாரில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்துவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அருண்குமார் முன்னிலை வகித்தார். பால் எலிசா வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாமஸ், லாரன்ஸ், ராஜூ, சாமுவேல் ராஜ், ஆரோன், ஜார்ஜ் பாண்டியன், லாரன்ஸ் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாடத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு செபி பேராயத்தின் தலைவர் டாக்டர் மேஷாக் ராஜா, சிஎஸ்ஐ கும்மிடிப்பூண்டி குருசேகர ஆயர் ரத்தினசாமி, ஆர்சிஎப் இயக்குனர் ஆயர் அலெக்ஸாண்டர், இசிஐ ஆலய ஆயர் ஜெப நேசகுமார், திருஇருதய ஆண்டவர் ஆலய பாதிரியார் ஸ்டாலின், கிறிஸ்துவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்க பொது செயலாளர் யாபேஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு செபி பேராயத்தின் தலைவர் மேஷாக் ராஜா பேசும்போது, தமிழகத்தில் உள்ள 24 சதவீத கிறிஸ்துவர்கள், தமிழகத்தை ஆளுகின்றவர்களை தேர்ந்தெடுக்க கூடிய இடத்தில் இருக்கிறார்கள் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்றும், மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் வன்முறையை தடுத்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில் மணிப்பூர் வன்முறையில் இறந்த மக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷமும் எழுப்பப்பட்டது. முடிவில் போதகர்கள் குமார், ராஜன், பால்தினகரன் நன்றியுரை ஆற்றினர்.

*மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை கண்டித்து திருவள்ளூரில் அனைத்து திருச்சபைகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் பிரகாஷ், மெர்சி சுகுணா, பிரேம்குமார், பால் யாபேஸ், ஆடம், துரைராஜ், இமானுவேல், பால் ஆபிரகாம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்வாட்ஸ் டானியேல், ஜோசப் பிரபாகர், சாது பீட்டர், பிராங்க்ளின், ஸ்டீபன் ராஜ், ஞானபிரகாசம், மாணிக்க நெல்சன், ஜோசப் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்லஸ், தியாப்ளஸ், டேனியல் அபிஷேக், நரேன், அலெக்ஸ், உதயகுமார், சுதாகர், யோவேல், அர்ஜுன் சிங், பிரகாஷ், பாரதி, ராஜேஷ், கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பெண்களை மதிக்காத அரக்கர்களை தூக்கிலிட வேண்டும், மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடி நிவாரணங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அனைத்து திருச்சபைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மணிப்பூர் அரசை கண்டித்தும், பெண்களை மதிக்காமல் நிர்வாணப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post மணிப்பூர் வன்முறையை கண்டித்து கிறிஸ்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Christians ,Manipur ,Kummidipoondi ,Dinakaran ,
× RELATED கிறிஸ்தவர்களுக்கு மயான இடம் கலெக்டரிடம் மனு