×

மீனவர்களிடையே ஏற்படும் மோதலை தடுப்பதற்கு ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: பழவேற்காடு கடலில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதால் ஏற்படும் மோதலை தடுக்க காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் தென் மாவட்ட மீனவர்கள் அத்துமீறி விசை படகுகள் மூலம் மீன்பிடிக்கின்றனர். இதனால் பழவேற்காடு மீனவர்களுக்குள் பைபர் படகு, விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதனை தடுக்கும் விதமாக லைட் அவுஸ் குப்பம் ஊராட்சி, பழவேற்காடு மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை வஞ்சிவாக்கம் சுனாமி குடியிருப்பு அலுவலகத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் நடைபெற்றது.  இதில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், மீன்வளத்துறை இயக்குனர் அஜய் ஆனந்த், ஆய்வாளர் பாரதிராஜா, கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 14 மீனவ கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் பழவேற்காடு கடலில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க அத்துமீறி நுழைவதை தடுக்கவும், மோதல் ஏற்படாமல் இருக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் சிவனேசன், தர்மதுரை மற்றும் வருவாய்த்துறையினர், மீன்வளத் துறையினர் கலந்துகொண்டு பழவேற்காடு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மீன்வளத்துறை மூலமாக சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்து தற்காலிக முடிவு எடுக்கப்பட்டது.

The post மீனவர்களிடையே ஏற்படும் மோதலை தடுப்பதற்கு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Palavekadu ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே சாலை துண்டிப்பால்...