×

நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியது; வீராணம் ஏரியில் இருந்து 1850 கனஅடி நீர் வெளியேற்றம்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி 11 கி.மீ நீளமும், 5.6 கி.மீ அகலமும் கொண்டது. இந்த ஏரியின் ஆழம் கடல் மட்டத்தில் இருந்து 47.50 அடி. கொள்ளளவு 1445 மில்லியன் கன அடிகளாக உள்ளது. ஏரிக்கு தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு மூலமாக தண்ணீர் வரும். இது தவிர அரியலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில் மழை பெய்யும் காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை ஆகியவைகளின் வழியாக மழைநீர் வரும். கீழ் கரையில் உள்ள 22 பாசன மதகுகள், மேல் கரையில் 6 மதகுகள் வழியாக விவசாய பானத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
ஏரி முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ப.வீராணம் அணைக்கட்டு மூலமாக உபரிநீர் வெளியேற்றப்படும். இதுதவிர சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய வீராணம் திட்டம் மூலம் வீராணம் ஏரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 73 கனஅடி அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த நாட்களில் மழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு 1886 கனஅடி நீர் வர தொடங்கியது. இதையடுத்து நடப்பு ஆண்டில் ஏரியானது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. இதை தொடர்ந்து ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 73 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏரியானது தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகும். சென்ற முறை சென்னைக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே அனுப்பி வந்தோம். இந்த முறை பாசனத்திற்காகவும், சென்னை குடிநீர் தேவைக்காகவும் இந்த நீர் திறந்து விடப்படும். மேலும் வரும் காலம் மழை காலம் என்பதால் 1850 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றனர்.

 

The post நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியது; வீராணம் ஏரியில் இருந்து 1850 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Veeranam Lake ,Katumannargo ,Veerana Lake ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED சம்பா‌ சாகுபடி பாசனத்திற்காக கீழணை,...