சென்னை: தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு படிப்புக்கான இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு குறித்த அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்படி, விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க, விண்ணப்பக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 5 கல்லூரிகளுக்கு ஒரே தடவை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளான நேற்று 18,322 பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 19ம் தேதி (வெள்ளிக்கிழமை).
இதேபோல், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 35,837 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் 9,233 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும், 2 ஆயிரத்து 981 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
The post பொறியியல் – கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் போட்டா போட்டி appeared first on Dinakaran.