×

கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெற தனி தீர்மானம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கிறிஸ்துவ அமைப்புகள் நேரில் சந்தித்து நன்றி

சென்னை: கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களை பெற அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றியமைக்காக பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசும்போது, “இந்த சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித் கிறிஸ்துவ மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி அதில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, தேர்தல் ஆதாயங்களை பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களை பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற முதலமைச்சராக திகழ்கிறார். இந்த அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் தேவாலய பணியாளர்களுக்கு வாரியம் அமைத்தது, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

தலித் கிருத்துவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான் பேசும்போது, தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாப்பை, இடஒதுக்கீடை வழங்க வேண்டும் என்று மிகத் தெளிவாக, வலுவாக எடுத்துரைத்து, தலித் கிறிஸ்தவர்களின் துயரை துடைத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தலித் கிறிஸ்துவ சமுதாயம் என்றும் கடமைப்பட்டிருக்கும் என்றார்.

செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் பேசும்போது, நம் எல்லோருக்கும் ஒரு புது நம்பிக்கையை, புது விடியலை கொடுக்கின்ற விதத்திலே, தலித் கிறிஸ்தவர்களும் பட்டியலினத்திலே சேர்க்கப்பட வேண்டும், அவர்களுக்கு மற்ற பட்டியலினத்தவற்கு கிடைக்கின்ற உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக நெஞ்சார்ந்த நன்றி என்றார்.தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் பெர்னான்டஸ் ரத்தினராஜா பேசும்போது, வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி என்றார்.

இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தலித் கிருத்துவ விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேத்யூ, சென்னை – தென்னிந்திய திருச்சபை செயலாளர் டேனியல் டைட்டஸ், பேராயர்கள் சர்மா நித்தியனந்தம், வி.ஜி.பர்னபாஸ், பெந்தகோஸ்தே மாமன்ற பேராயர்கள் ஜோயல் சேகர், தேவபுத்திரன், ஜான்சன், ஜான்ஜெபராஜ் மற்றும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் பேராயர்கள், அருட்சகோதரிகள், பாதிரியார்கள் கலந்து கொண்டு கொண்டனர்.

The post கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெற தனி தீர்மானம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கிறிஸ்துவ அமைப்புகள் நேரில் சந்தித்து நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief President ,Tamil ,Nadu ,Aadiraviders ,G.K. ,Stalin ,Christian ,Chennai ,Aditravidaravidans ,Aadhiravidans ,B.C. ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...