×

ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பம்மல் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (55). முதுநிலை ஆசிரியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017 டிசம்பர் மாதம், மதிவாணன் குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சிக்னலில், தனது பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த பைக், இவரது பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மதிவாணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில் தனது கணவரின் இறப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி, மதிவாணனின் மனைவி முத்தரசி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, மனுதாரர் கணவர் இறப்புக்கு பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.27.63 லட்சம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், மனுதாரர் கணவரின் கவனக்குறைவு காரணமாக, 10 சதவீதம் குறைக்கப்பட்டு, 24.86 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும் என டாடா ஏஐஜி ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Tags : teacher ,
× RELATED பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு