×

இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பாணையை உடனே வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பாணையை உடனே வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என சபாநாயகர் அவர்களும் இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தை பின்பற்றி, கர்நாடகா, ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே தன்னிச்சையாக நடத்தலாம் என்பதற்கும் அதற்கு சட்டரீதியான எவ்வித தடைகளும் இல்லை என்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்?

சமூக ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையின் முதல் படியான இட ஒதுக்கீட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, ஒன்றிய அரசை காரணம் காட்டி இனியும் காலம் தாழ்த்தாமல், சமூகத்தில் பின் தங்கிய மக்களையும், அவர்களின் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பாணையை உடனே வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,General ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத்...