தேவதானப்பட்டியில் பால கட்டுமான பணிகள் நிறைவு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சளார் அணைக்கு கீழ் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கு மஞ்சளாறு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அணையில் நீர் திறந்து விடப்படும் போதும், மழைக்காலங்களில் உபரி நீர் அதிக அளவில் வெளியேறும் போதும் ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் பத்து கிலோமீட்டர் தொலைவு சுற்றி சென்று விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மஞ்சளாறு அணை பாசன விவசாயிகள் கடந்த 25 ஆண்டுகளாக மஞ்சளாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பாலம் கட்டித் தரக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணிகள் தொடங்கி 80 சதவீதம் முடிவடைந்து, கடந்த ஓராண்டுக்கு மேலாக, இரு கரைகளும் இணைக்கப்படாமல் பாலத்தின் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து, கிடப்பில் போடப்பட்ட பணிகளை முழுமையாக முடித்துள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தேவதானப்பட்டியில் பால கட்டுமான பணிகள் நிறைவு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: