×

ஐயப்ப பக்தர்கள் வேன் மோதி ஆட்டோவில் சென்ற 5 பேர் பலி

பாலக்காடு: ஆட்டோ மீது ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத் (50), ஆட்டோ டிரைவர். இவரது உறவினர்களான தஸ்நீமா (33), அவரது மகள்கள் ரின்ஷா பாத்திமா (12), ரைஹா பாத்திமா (4), மகன் முகமது ரயான் (1), தஸ்நீமாவின் அக்கா முக்‌ஷினா (35) ஆகிய 6 பேரும் நேற்று மாலை மஞ்சேரியிலிருந்து புல்லூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். மஞ்சேரி-அரீக்கோடு சாலை, செட்டியங்காடி பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஐயப்ப பக்தர்கள் வேன் எதிர்பாராத விதமாக பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோவில் இருந்த தஸ்நீமா, சிறுமிகள் ரின்ஷா பாத்திமா, ரைஹா பாத்திமா, முக்‌ஷினா, ஆட்டோ டிரைவர் அப்துல் மஜீத் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் முகமது ரயான் (1) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ஐயப்ப பக்தர்கள் வேன் மோதி ஆட்டோவில் சென்ற 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Palakkad ,Kerala ,
× RELATED ஓணம் சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி டிரைவர் பலி