×

விழிப்புணர்வு எதிரொலி: இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80% அதிகரிப்பு..!!

டெல்லி: இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடல் உள்ளுறுப்புகளில் மீண்டும் வளரும் தன்மை கொண்ட கல்லீரல் பிற உள்ளுறுப்புகளின் இயக்கவியலுக்கான அச்சாணி என்கிறார்கள் மருத்துவர்கள். அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவோர் மூளை சாவு அல்லது விபத்தில் இறந்தவர்களின் உறுப்பை பெற முன்பதிவு செய்வது கட்டாயமாகும் என்றாலும் கூட அதற்கு அதிகபட்சம் 15 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் உயிருடன் உள்ள குடும்ப உறுப்பினர்களே கல்லீரல் தானம் செய்ய முன்வருகின்றனர். இந்த வகையிலான கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். சிறுநீரகத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 4 ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதில் உயிருடன் இருப்போர் உறுப்பு தானம் செய்வது, மேலை நாடுகளை விட இந்தியாவில் அதிகம் என்பது புதிய செய்தியாகும்.

18 வயது முதல் 55 வயது வரை உள்ள சொந்த குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் நோயாளிக்கு கல்லீரல் தானம் செய்யலாம். கல்லீரலில் அதிகபட்சம் 6 சதவீதம் அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்படும். வெட்டப்பட்ட கல்லீரல் 6 வாரங்களில் முழுமையான வளர்ச்சியை எட்டிவிடும். மறுபுறத்தில் கல்லீரல் புற்றுநோயை விட பாஃட்டி லிவர் எனப்படும் கொழுப்புமிகு கல்லீரல் பிரச்சனை மிக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள். இது தொடர்பான விழிப்புணர்வும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post விழிப்புணர்வு எதிரொலி: இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80% அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...