×

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

ஹூஸ்டன்: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் மணி(45). கணினி பொறியாளரான இவரது மனைவி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரதீபா அரவிந்த்(40). இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லியான்டர் பகுதியில் மகள் அன்றில் அரவிந்த்(17) மற்றும் மகன் ஆதிர்யன்(14) ஆகியோருடன் வசித்து வந்தார்.

ரூஸ் உயர்நிலை பள்ளியில் படித்த அன்றில் அரவிந்த் டல்லாஸ் பல்கலை கழகத்தில் கணினி அறிவியல் பட்டப் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார். இதனால் தன் மகளை பல்கலை கழகத்தில் சேர்க்க அரவிந்த் மணி, பிரதீபா அரவிந்த் இருவரும் கடந்த புதன்கிழமை(ஆக.15) காரில் சென்றனர். இவர்கள் சென்ற கார் லம்பாசஸ் கவுன்டி பகுதியில் எதிர்திசையில் வந்த கார் ஒன்று டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடி, மீடியனை தாண்டி அரவிந்த் மணியின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு கார்களும் நொறுங்கியது. அரவிந்த் மணி, பிரதீபா அரவிந்த் மற்றும் அன்றில் அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த 2 பேரும் பலியாகினர். சாலை விபத்தில் பெற்றோரை இழந்து உதவ யாருமின்றி ஆதிர்யன் தனியாக விடப்பட்டுள்ளான். இந்த செய்தியை அறிந்த தன்னார்வலர்கள் பலர் சிறுவனுக்கு உதவ இணையதளங்கள் மூலம் ரூ.5.87 கோடி நிதி திரட்டி உள்ளனர். இந்த சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : US ,Houston ,United States ,ARVIND MANI ,KOWAI DISTRICT ,TAMIL NADU ,Pradeepa ,Salem District Athur ,
× RELATED அனல் பறந்த நேரடி விவாதம்; டிரம்புக்கு...