ராமநாதபுரம்: நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி செய்தது தொடர்பாக, பாஜ பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே, சுவாத்தான் பகுதியில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தை, நடிகை கவுதமிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன் வாங்கி கொடுத்துள்ளார். இதில், ரூ.56.47 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, மதிப்பை உயர்த்திக் காட்டி, போலியாக ஆவணம் தயாரித்து நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடிக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் நடிகை கவுதமி புகார் அளித்தார்.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 6ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகை கவுதமி நேரில் ஆஜராகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கினார். இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பாஜ பிரமுகர் அழகப்பன், அவரது மகன்கள் சொக்கலிங்கம், சிவஅழகப்பன், மருமகள் ஆர்த்தி, அவரது கூட்டாளிகள் ரமேஷ்சங்கர் ஷோனாய், பாஸ்கர், விசாலாட்சி, நாச்சியாள், நிலபுரோக்கர் நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி; பாஜ பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு: விரைவில் கைதாகிறார்கள் appeared first on Dinakaran.