×

பொதுமக்கள் தவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் மழையால் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை

திருவாரூர், டிச.4: திருவாரூர் மாவட்டத்தில் மழையினால் தேங்கி உள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் நகர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த மழைநீர் அனைத்தும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் மோட்டார் பம்பு கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் நகரில் புதுத்தெரு, மஜீது தெரு உட்பட பல்வேறு இடங்களில் நேற்று நகராட்சி சார்பில் மழை நீரானது மோட்டார் பம்பு கொண்டு அகற்றப்பட்ட நிலையில் இதனை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு விரைவில் நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையர் (பொ) முத்துக்குமரனிடம் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளிதேத பேட்டி:

கடந்த நிவர் புயல் எச்சரிக்கையின் போது மாவட்டம் முழுவதும் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை எச்சரிக்கையையொட்டி சாதாரண மக்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடைய கூடாது என்பதற்காக அனைத்து துறை சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி தேங்கிய மழை நீரானது அகற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் மழைநீரைஅகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு நன்மைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி காவிரி உரிமையை பெற்றுக் கொடுத்தார். அவரது வழியில் ஆட்சி நடத்திவரும் முதல்வர் பழனிசாமி தற்போது கால் நூற்றாண்டு காலமாக டெல்டா மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்.இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் திட்டங்களை கண்டித்து பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த வேளாண் சட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Suffering ,district ,Thiruvarur ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்