தஞ்சை, டிச. 3: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் அளிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான கரிகாலச்சோழன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் 2007ம் ஆண்டு தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது. அந்த அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த சிறந்த தமிழ் படைப்புகளுக்காக கரிகாலச்சோழன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2018ம் ஆண்டு கரிகாற்சோழன் விருதுக்கான போட்டியில் மூன்று நாடுகளில் வெளிவந்த தமிழ் படைப்புகள் பங்கேற்றன. இலங்கையில் இருந்து 14 புத்தகங்கள், சிங்கப்பூரில் இருந்து 9 புத்தகங்கள், மலேசியாவில் இருந்து 17 புத்தகங்கள் இப்போட்டியில் பங்குபெற்றன.