சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சேலம், டிச.3:தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் மாமனும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளருமான ராஜாவின் தந்தையுமான கருப்ப கவுண்டர் (98), கடந்த இருதினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அந்தியூர் செல்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். தொடர்ந்து, காரில் அந்தியூருக்கு சென்ற அவர், உயிரிழந்த கருப்ப கவுண்டரின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கருப்ப கவுண்டரின் மகன் ராஜா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் வந்த முதல்வர், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். இன்று(3ம் தேதி) காலை அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து, சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். முன்னதாக, சேலம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, இன்று மாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், கொடுமுடி, கரூர் மார்க்கமாக மதுரைக்கு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: