தென்காசி, டிச.3: தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜ் தலைமையில் பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் மற்றும் கலெக்டர் சமீரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: வெள்ளம் செல்வதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. நிவாரண பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.