மானூர், டிச.3: மத்தியஅரசை கண்டித்து மானூரில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி நடந்தது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மானூரில் ஏர் கலப்பை பேரணி நடந்தது. மானூர் ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பேரணிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்து பேசினார். பின்னர் மானூர் பஜாரில் பேரணியாக புறப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பேரணியில் பங்கேற்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பேரணியில் மாவட்ட வட்டாரத்தலைவர்கள் சொரணம் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாக்கியகுமார், சொக்கலிங்ககுமார், மனோகரன், மாவட்ட ஊடகபிரிவு அருள்ராஜ் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் மானூர் பஜாரில் 30 நிமிடங்கள் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. இதனிடையே மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட 34 பேர் மீது மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.