×

மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பாலம் அருப்புக்கோட்டை மக்கள் அச்சம்

அருப்புக்கோட்டை, டிச. 3: அருப்புக்கோட்டையில் ரயில்வே மேம்பாலத்தின் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை- மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாகத்தான் மதுரை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல முடியும். தவிர பாலத்தின் மறுபக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், மகளிர், தாலுகா காவல்நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. மேலும் திருக்குமரன்நகர், இ.பி காலனி, ராஜீவ்நகர், பாலையம்பட்டி, கோபாலபுரம் உட்பட்ட கிராமங்களுக்கும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இப்பாலத்தின் ஒரு பகுதி ஊராட்சி, ஒரு பகுதி நகராட்சி பராமரிப்பில் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும்தான் மின்விளக்குகள் உள்ளது. அதுவும் எரியாததால் இரவுநேரங்களில் பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி டூவீலர்களில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவமும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் அவசரத்திற்கு கூட இப்பாலத்தை கடந்து வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தின் ஒரு பகுதியில் மின்விளக்குகள் அமைப்பதுடன், ஊராட்சியும், நகராட்சியும் இணைந்து எரியாத மின்விளக்குகளை பழுதுநீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,Aruppukottai ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...