பேரையூரில் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றம்

பேரையூர், டிச. 3: தினகரன் செய்தி எதிரொலியாக பேரையூரில் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றப்பட்டன. பேரையூர் பஸ்நிலையத்தில் மழைக்காலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து வந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து கடந்த நவ.29ல் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் உத்தரவின்பேரில் பேரையூர் பேரூராட்சி செயல்அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் ஜேசிபி மூலம் உசிலம்பட்டி சாலையில் பேரையூர் முக்குச்சாலை முதல் அய்யர் ஓடை வரையிலான பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை அகற்றினர். மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்து, சிமெண்ட் கான்கீரிட்டால் மூடப்பட்ட இடங்களை அகற்றினர். ஒரு சில கடைகள் முன்பு பாதாள சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்று ஒருநாள் பேரூராட்சி நிர்வாகம் கெடு கொடுத்துள்ளது. அகற்றாவிட்டால் ஜேசிபி மூலம் மீண்டும் பாதாள சாக்கடை பாதைகள் சரிசெய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் அலுவலர்கள் ஜவஹர், அன்சாரி, ஜெயக்குமார், கார்த்திக், காளி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Related Stories: