திண்டுக்கல், டிச. 3: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் 3வது நாளாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் கட்சியினர் நாகல்நகர் சிண்டிகேட் வங்கி முன்பாக முற்றுகையிட்டனர்.அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மோடி, அமித்ஷா உருவபடங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்தனர். அதனை அணைக்க குடத்துடன் வந்த போலீசாரிடமிருந்து குடங்களை பிடுங்கி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.