×

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திண்டுக்கல், பழநியில் மார்க்சிஸ்ட் கட்சி மறியல்

திண்டுக்கல், டிச. 3: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் 3வது நாளாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  முன்னாள் எம்எல்ஏ  பாலபாரதி தலைமையில் கட்சியினர் நாகல்நகர் சிண்டிகேட் வங்கி முன்பாக முற்றுகையிட்டனர்.அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மோடி, அமித்ஷா உருவபடங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்தனர். அதனை அணைக்க குடத்துடன் வந்த போலீசாரிடமிருந்து  குடங்களை பிடுங்கி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

பழநி பழநி கான்வன்ட் சாலையில் இந்தியன் வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.  முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். போராட்டக்காரர்கள் வங்கியை நெருங்க முடியாதபடி டிஎஸ்பி சிவா, டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் இரும்பு தடுப்புகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  அப்போது போராட்டத்தில் பங்கேற்ற சிலர் தரையில் படுத்து  தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்சாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சிவமணி உட்பட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Marxist ,Palani ,Dindigul ,Delhi ,
× RELATED பழனியில் இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை ரத்து!