திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( 82). இவர் அதே கிராமத்தில் சர்வே எண் 422/1 ல் சுமார் 17 சென்ட் கிராம நத்தம் நிலத்தை முன்னோர்கள் காலம் தொட்டு ஆண்டு அனுபவித்து வருகிறார். இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன், கோபால், அங்கமுத்து, தயாநிதி, நாகமணி, விநாயகம் மனைவி நாகம்மாள், தீபன், முனுசாமி, ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து போலியான பட்டவை தயாரித்து கொண்டு அதில் தமிழக அரசின் கோபுர முத்திரை மற்றும் கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியரின் முத்திரையை வைத்து கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்கள் 2926, 2927, 2928 படி கடந்த அக்டோபர் 10ம் தேதி பதிவு செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் செந்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இது குறித்து பாலகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தனிடம் புகார் மனு கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு பிரிவு தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து ( 56), நாகமணி ( 36) ஆகிய 2 பேரையும் கைது செய்து கும்மிடிப்பூண்டி மேஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தினர். மேஜிஸ்ட்ரேட் அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரும் பொன்னேரி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். மேலும் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் செந்தில் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.