×

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்

காலாப்பட்டு,  டிச. 3: புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறைக்குள் கைதிகள் மோதிக்கொண்டதில் ஒரு ரவுடி படுகாயமடைந்தார்.  இச்சம்பவத்தால் சிறைக்குள் பதற்றமான  சூழல் நீடிக்கிறது.புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். செல்போன் புழக்கம் அதிகளவில் இருப்பதாக வந்த புகாரின்பேரில்  உயர் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.  இதன்காரணமாக கைதிகளிடமிருந்து கடந்த 2  மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சிறைக்குள் அடிக்கடி கைதிகளுக்கு இடையே மோதலும்  ஏற்பட்டு வருகிறது. இதனால் முக்கிய ரவுடிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு  மாற்ற சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

  இதனிடையே நேற்று  முன்தினம் கொலை வழக்கு விசாரணை கைதியான வில்லியனூர், உத்திரவாகினிபேட்டை சேர்ந்த  ரவுடி பாம் ரவி  தனது அறையில்  படுத்திருந்தார். அப்போது குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு  தகடுகளுடன் அங்கு வந்த பிரபல ரவுடிகளான தடி அய்யனார், அஜித்குமார், தாடி  அய்யனார் என்ற ராஜதுரை ஆகியோர் பாம் ரவி மீது கொலைவெறி தாக்குதல்  நடத்தினர். பதிலுக்கு அவரும் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல்  நிலவியது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறைவார்டன்கள்  மோதலை தடுத்து பாம் ரவியை அக்கும்பலிடமிருந்து காப்பாற்றினர். படுகாயமடைந்த அவருக்கு சிறை  சாலைக்குள் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத், சம்பவம் தொடர்பாக சிறை பணியாளர்களிடம்  விசாரித்தார்.

அப்போது சிறைக்குள் பாம் ரவி, தடி அய்யனார் ஆகியோர்  ஒருவரையொருவர் முறைத்துக் கொண்ட விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு  இருகோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். இது நேற்று கொலைவெறி தாக்குதலில் முடிந்துள்ளது.இதுபற்றி காலாப்பட்டு காவல் நிலையத்தில் சிறைக்கண்காணிப்பாளர் கோபிநாத் புகார்  அளித்தார். கிழக்கு எஸ்பி மாறன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர்,  எஸ்ஐ சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் 3 கைதிகள் மீதும் 2 பிரிவுகளில்  வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே நேற்று மாஜிஸ்திரேட் ஒப்புதல் பெற்று  மத்திய சிறைக்கு சென்ற காலாப்பட்டு போலீசார் சிறைக்குள் கைதிகள் மோதிக்  கொண்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரவுடிகளான தடி  அய்யனார் மீது கொலை வழக்கும், அஜித்குமார் மீது கொலைமுயற்சி வழக்கும்,  தாடி அய்யனார் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது  குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் காலாப்பட்டு சிறையில் பதற்றமான சூழல்  நிலவுகிறது.

Tags : Inmates terror clash ,Pondicherry Central Jail ,
× RELATED புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல்: போலீஸ் விசாரணை