கடலூர், டிச. 3: வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் கரையை கடப்பதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
புரெவி புயல் கரையை கடப்பதையொட்டி கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ள நிலையில், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் நகரின் பல்ேவறு பகுதிகளில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள், பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.