திருப்பூர் 52வது வார்டில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

திருப்பூர், டிச.3: திருப்பூர் 52வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக்ேகாரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டுக்கு உட்பட்ட கல்லாங்காடு, வள்ளலார் நகர், லட்சுமி நகர், மன்னங்காடு, திருக்குமரன் நகர், அம்மன் நகர், மூகாம்பிகை நகர், அமராவதி நகர், பலவஞ்சிபாளையம், ஜனசக்தி நகர், ஜெயலலிதா நகர், வேலன் நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, தார்ச்சாலை, குடிநீர் வசதி போதுமான அளவில் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று காலை பலவஞ்சிபாளையம் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினர். அவர்கள் கலைந்து போக மறுத்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,`52வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. சாக்கடை கால்வாய் வசதி சுத்தமாக கிடையாது. அவ்வப்போது கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் குடிநீர், தெருவிளக்கு, குப்பை என பல பிரச்னை சரி செய்யப்படாமல் உள்ளது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: