×

போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்க நடவடிக்கை ஊட்டியில் வாகன பதிவெண்ணை பதிவு செய்யும் நவீன கேமராக்கள்

ஊட்டி, டிச. 2:  ஊட்டி நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் அதிநவீன தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் ேநற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களை குறைத்தல் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்வதிலும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டி நகரின் பல பகுதிகளில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் பொருட்டு சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் ஊட்டி-கூடலூர் சாைல, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகளில் அதிநவீன தானியங்கி வாகன பதிவெண்களை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை மாவட்ட எஸ்பி. சசிமோகன் துவக்கி வைத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ஊட்டியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

5 வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்களும், 4 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு பின்னர் அவர்களின் முகவரிக்கோ அல்லது கைப்பேசிக்கோ குறுஞ்செய்தி மூலமாகவோ விதிமீறல் தகவல் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முறை வெற்றி பெறும் பட்சத்தில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் செயல்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...