குன்னூர், டிச. 2: குன்னூர் அருகே உள்ளது கேத்தி பாலாடா பகுதி. இப்பகுதி கொலக்கம்பை மற்றும் கேத்தி போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பகுதியில் வருகிறது. கேத்தி பாலாடா பகுதியில் பத்திற்கு மேற்பட்ட கேரட் கழுவும் இயந்திரங்கள் செயல்பட்டு வருவதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கேரட் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் கேரட்டை இங்கு சுத்தம் செய்து பின்னர் வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கேத்தி, கொலக்கம்பை போலீசார் விவசாயிகளிடம் இருந்து கேரட்டை இலவசமாக பெற்றுச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரட் கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாவதால் போலீசார் குறைந்தபட்சம் பத்து கிலோ வரை இலவசமாக பெற்றுச்செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் லாரி மற்றும் பிக்கப் வாகனங்களை மறித்து கேரட் தரவில்லை என்றால் அபராதம் விதிப்பதாக மிரட்டுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட எஸ்பி. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.