விளாத்திகுளம், டிச. 2: விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள 27 பாசன கண்மாய்களில் 3 பாசன கண்மாய்கள் நூறு சதவீதமும், 12 பாசன கண்மாய்கள் 90 சதவீதமும், 9 பாசன கண்மாய் 75 சதவீதமும்,3 பாசன கண்மாய்கள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்கள் குடிநீருக்காகவும் பழகத்திற்காகவும் பயன்படுத்தும் ஊரணிகள் மொத்தம் 258 உள்ளது. இதில் 14 ஊரணிகள் 100 சதவீதமும் ,61 ஊரணிகள் 90 சதவீதமும்,104 ஊரணிகள் 75 சதவீதமும் ,79 ஊரணிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
இதனிடையே தற்போது உருவாகியுள்ள புரெவி புயலை அடுத்து விளாத்திகுளம் ஒன்றிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமப்புறங்களில் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் துணை பிடிஓக்கள், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவினர் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் ஆகியோர் கிராம வாரியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர்.