நாகை, டிச.2: மழை காலத்தில் வேலையில்லாத தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நாகை எம்பி செல்வராஜ் வலியுறுத்தி உள்ளார்.வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, கோடியக்காடு, ஆயக்காரன்புலம், வேதாரண்யம், பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட இடங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை எம்பி செல்வராஜ் கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அரசு முகக்கவசம் மற்றும் கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து தரவேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கும், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் மழை காலத்தில் வேலை இல்லாததால் அவர் குடும்பத்திற்கு தலா ரூ.2000 வங்கியில் செலுத்த வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை தற்போது தனியார் கணினி மையத்தில் செயல்படுத்தப்படுவதால், கூடுதல் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே இ -சேவை மையத்திலும், கூட்டுறவு வங்கிகளிலும் காப்பீடு செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.