வில்லியனூர், டிச. 2: தரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுவதை கண்டித்து கோர்காடு கிராம மக்கள், வில்லியனூர்- கரிக்கலாம்பாக்கம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி, வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர்தரமற்ற மற்றும் அழுக்கு, மாசு கலந்து வருவதாகவும், அதை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்காத நிலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வில்லியனூர்-கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மங்கலம் எஸ்ஐ சரண்யா தலைமையிலான போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை அவர்கள் ஏற்க மறுத்த நிலையில், அங்கு வந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக அங்கு பரபரப்பு நிலவியது.