புதுச்சேரி, டிச. 2: புதுச்சேரியில் நேற்று புதிதாக 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3316 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 23, காரைக்கால்- 9, ஏனாம்- 2, மாகே- 19 என மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 45 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.