மார்த்தாண்டம், டிச.2: பேச்சிப்பாறையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பிளஸ்2 மாணவியை பலத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தற்போது தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பேஸ்புக் கணக்கு தொடங்கி பலருடன் நட்புடன் பழகினார். அப்போது கருங்கல் பகுதியை சேர்ந்த ஷாஜியுடன் (22) பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் பல்வேறு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஷாஜி மாணவியின் வீடு இருக்கும் பகுதிக்கு பைக்கில் சென்றார். பின்னர் வாட்ஸ் அப் மூலம் மாணவியை வெளியே வருமாறு கூறி உள்ளார்.
மாணவியும் பேஸ்புக் நண்பனை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டை விட்டு வெளியே வந்தார். சிறிது நேரம் அவருடன் பேசிய ஷாஜி, வலுக்கட்டாயமாக மாணவியை பைக்கில் அமர வைத்து பேச்சிப்பாறை அணை பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார். மறைவான இடத்துக்கு சென்றதும் ஷாஜி திடீரென மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் அவரை பைக்கில் அழைத்து வந்து முளகுமூடு பகுதியில் விட்டு விட்டு சென்று விட்டார்.
இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனே மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.இந்த தகவல் வெளியானதால் ஷாஜி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் ஷாஜியை தேடி வருகின்றனர்.