ஆலங்குளம், டிச.1: ஆலங்குளம் அருகே நெட்டூர் சாலைத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பாப்பா (75). இவரது கணவர் இறந்து விட்டார். இரண்டு மகன்கள். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பாப்பா மட்டும்
தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் பாப்பா தூங்கி கொண்டிருந்த போது ஓட்டை பிரித்து மர்ம நபர் வீட்டுக்குள் இறங்கி உள்ளார். பின்னர் பாப்பா கழுத்திலிருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு நடந்த வீட்டின் அருகிலுள்ள சிசிடி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிய வருகிறது. ஊருக்குள் உள்ள வீட்டில் ஓட்டை பிரித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.