×

விவசாயிகளுக்கு பயிர்களின் மகரந்த சேர்க்கை குறித்து அதிகாரிகள் விளக்கம்


அரியலூர், டிச.1: செந்துறை அடுத்த பெரும்பாண்டி கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் பயிர்களின் மகரந்த சேர்க்கை குறித்த விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துரையாடல் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜென்சி முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பழனிச்சாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி பேசுகையில், செந்துறை வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கான அரசு திட்டங்களை எடுத்து கூறினார். தொழில்நுட்ப உரையாற்றிய வட்டார தொழிலட்நுட்ப மேலாளர் பழனிச்சாமி, தன்மகர்ந்த சேர்க்கை மற்றும் அயல் மகரந்த சேர்க்கை நெற்பயிர், மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றில் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். நெற்பயிரானது மோனோசியஸ் வகை பூவமைப்பை கொண்டுள்ளதால் 100 சதவீத தன்மகர்ந்த சேர்க்கைக்கு உள்ளாகிறது என தெரிவித்தார்.

மக்காச்சோள பயிரில் மகரந்தம் முன்னதாக முதிர்ச்சியுறுவதாலும், சூலகம் பின்னதாக வளர்ச்சியுறுவதாலும் 100 சதவீத அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது என்றார். இதேபோல கம்பு பயிரில் சூலகம் முன்னதாக முதிர்ச்சியுறுவதாலும், மகரந்தம் பின்னதாக வளர்ச்சியுறுவதாலும் அயல் மகரந்த சேர்க்கை 100 சதவீதம் நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்த சேர்க்கை மற்றும் தன்மகரந்த சேர்க்கையை கொண்டு வீரிய ஒட்டு விதை உற்பத்தி முறைகள் மாறுபடுகின்றன எனவும், நடப்பு காலங்களில் வீரிய ஒட்டு ரகங்களே அதிக மகசூலை தருகின்றன எனவும் தெரிவித்தார். பெரும்மாண்டி விவசாயி நடேசன் நெல்வயலுக்கு விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட்டு அவற்றின் மகரந்தத்தை நீக்குவதை பற்றியும், அடுத்த பூக்களின் மகரந்தத்தை தூவுவது பற்றியும் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் அப்பாவு, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன், குமணண் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா