கடலூர், டிச. 1: கடலூர் துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் நிவர் புயலாக உருமாறி கடலூர்- மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில் கன்னியாகுமரிக்கு வடகிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கை தொடர்பான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்றின் வேகம் மற்றும் அலைகளின் உயரம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் உள்ளிட்ட வட தமிழக பகுதியில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து பல்வேறு ஏரி, குளம், குட்டைகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போதைய புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம் அனைத்து வருவாய் துறையினரை நீர்நிலைகள் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.