புயல் சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழு 2ம் தேதி புதுவை வருகை முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி, நவ. 30: புதுவையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு டிச.2ம் தேதி புதுவைக்கு வரவுள்ளதாக முதல்வர் நாராணயசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ம் தேதி நள்ளிரவு மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல், புதுவையிலும் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. புயலையொட்டி பெய்த கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட சேத கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 55 ஹெக்டேர் வாழை தோட்டங்களில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உத்தேசமாக ரூ.400 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு சேதத்தையும் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டறிந்தார். அப்போது தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார். மேலும், மத்திய அரசு புதுவைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில், புயலால் சேதம் அடைந்துள்ள பயிர்கள் மற்றும் பிற சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று (30ம் தேதி) தமிழகம் வருகிறது.  இந்த குழுவில் மத்திய வேளாண்துறை செயலர், நிதித்துறை (செலவினங்கள்) செயலர், சாலை போக்குவரத்து துறை செயலர், மின்துறை செயலர், ஊரக மேம்பாட்டுத்துறை செயலர், மீன்வளத்துறை செயலர், நீர்வளத்துறை செயலர் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர், துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

டிச.1ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளது.அதைத் தொடர்ந்து, டிச.2ம் தேதி புதுவைக்கு வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது. அதன்பிறகு கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது. இக்குழு மத்திய அரசிடம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதுவைக்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, `புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட மத்திய குழு 2ம் தேதி புதுவை வருகிறது. மத்திய வேளாண் துறை செயலர் உட்பட 7 அதிகாரிகள் வந்து சேத விவரங்களை கணக்கிடுவார்கள்’ என்றார்.

Related Stories: