பண்ருட்டி, நவ.30: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுகிசந்திரன்(62), தொழிலதிபர். இவரது மகன் முத்துகுமரன்(42) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேம்பால கட்டுமான பணியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சுகிசந்திரன் அப்பகுதியில் விவசாயம் மற்றும் ரைஸ்மில் நடத்தி வரும் நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை வருமான வரித்துறையினர் 11 பேர் கொண்ட குழுவினர், சுகிசந்திரன் வீட்டில் நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி போலீசார் ஷிப்டு முறையில் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.