×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை, நவ.30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலையில் அருள்தரும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் திருக்கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும். அதோடு, நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும், ஆறு ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும் அமைந்திருக்கிறது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக தீபத்திருவிழா உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மாடவீதியில் நடைபெறும் சுவாமி திருவீதியுலா ரத்து செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி தேரோட்டம், மகா தேரோட்டமும் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் தினமும் சுவாமிஉலா நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக நேற்று மகாதீப பெருவிழா நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3.45 மணிவரை அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு பரணி அபிஷேகம் நடந்தது. மேலும், மகா மண்டபத்தில் பிரதோஷ நந்தியின் வலதுபுறம் ஐந்து மடக்குகள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், பரிச்சாரக சிவாச்சாரியார்கள் மூலம் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ரதவிளக்கு வழியாக 2ம் பிரகாரம், 3ம் பிரகாரம் வழியாக வந்து அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக, சொர்ண பைரவர் சன்னதியில் மடக்கு தீபம் காட்சியளித்தது. பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன், ஏகனாகவும் அனேகனாகவும் அருள்பாலித்து (பஞ்சமூர்த்திகளாக) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மகாதீப பெருவிழா மாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ெதாடங்கியது. பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் காட்சியளித்தனர். பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.50 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். கார்த்திகை தீபத்திருவிழாவின்போது சில நிமிடங்கள் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வர் எழுந்தருள்வது சிறப்புக்குரியது.

அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் தங்கக் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றப்பட்டதும், சிவனின் திருவடிவமாக காட்சிதரும் 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில், ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாரை போற்றும் துதி, பாமாலை, சங்கு ஒலி முழங்கப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர், மகாதீபம் ஏற்றினர். அகந்தை அழித்து, அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக மலை உச்சியில் காட்சியளித்தார். தீப தரிசனத்தை தொடர்ந்து, கோயில் அனைத்து பிரகாரங்களும் தீபஒளியால் ஜொலித்தது. மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பரணி தீபம் மற்றும் மகா தீப விழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, டிஆர்ஓ ரத்தினசாமி, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்எல்ஏ, மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், ஏவவே கம்பன், குறைதீர்வு பிரிவு சிறப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆண்டுதோறும் தீபத்திருவிழாவை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம். அதனால், திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் காரணமாக, தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு, வெளியூர்களில் இருந்து வருவோர் திருவண்ணாமலையில் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 2,700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகர எல்லைகளில் 15 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, நகருக்குள் நுழையாதபடி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை நகரின் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவல பாதையிலும் பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட பஸ்களும், நகர எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை நகரின் அனைத்து சாலைகளும், வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மாடவீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடமும் போலீசார் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். தீபத்திருவிழா தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் கிரிவலப்பாதை நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பவுர்ணமி கிரிவலமான இன்றும் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களை பெரிதும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple Fire Festival ,The Mahadeepam ,mountain ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...