திருச்சி, நவ.30: திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்குகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டம் மார்க்கெட் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட முடிவின்படி நேற்று (29ம்தேதி) மாலை 6 மணி முதல் வியாபாரம் துவங்குவதாக இருந்தது. எனினும் மராமத்து பணிகள் நிறைவு பெறாததால் கலெக்டரின் அறிவுறுத்தல்படி இன்று (30ம் தேதி) மாலை 6 மணி முதல் வியாபாரத்தை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று காலை 6 மணிக்கு காந்தி மார்க்கெட் மெயின் கேட் திறக்கப்பட்டு வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு சென்று மாலை வியாபாரத்தை துவக்குவதற்கான ஆயத்த பணிக்ளை மேற்கொள்ள கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே இன்று மாலை 6 மணி முதல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் முழு வீச்சில் செயல்பட துவங்கும். காந்தி மார்க்கெட் வியாபாரிகளும் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்துகொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் வணிகம் செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட்டிற்குள் வரும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.