ஈரோடு, நவ. 30: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு ரயில்வே காலனி அருகே கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் இருவழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், பூந்துறை ரோடு, கரூர் ரோட்டில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் கொல்லம்பாளையம் ரவுண்டானாவில் இருந்து நுழைவு பாலத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் ரயில்வே பாலத்தில் மோதும் நிலை இருப்பதால், அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில் இரும்பால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், கனரக வாகனங்கள் 80 சதவீதம் இந்த நுழைவு பாலம் வழியாகவே இயக்கப்பட்டு வருகிறது.